புகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்.காம் இணைய தளத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறீர்களா?
இனி ஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழ் இணையதளத்தில், புகைப்படம் எடுப்பதற்காக வெள்ளிக்கிழமையன்று ஒரு தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பிற்கு தொடர்புடைய வகையில் நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்குள் புகைப்படத்தை அனுப்பி வைத்துவிட வேண்டும். பிபிசி தமிழ் பிரிவின் ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த புகைப்படங்கள் ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழ் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
தலைப்புக்கு தகுந்த புகைப்படங்ளை எடுத்து அனுப்ப வேண்டும். ஒருவர் தான் எடுத்த புகைப்படங்களில் சிறந்த ஒரு புகைப்படத்தை மட்டும் அனுப்பவேண்டும்.
மின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், இமெயில் முகவரி, சமூக வலைதள முகவரி, புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமிராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.
புகைப்படங்கள் நிழற்படக்கருவி கொண்டு மட்டுமே எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது கட்டாயம்.
வேறொருவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.
இந்த வாரத் தலைப்பு
முதல் வார புகைப்படப் போட்டிக்கான கரு: ’நீரும் நானும்!’
நீரோடு உங்களுக்கு உள்ள உறவு, நீங்கள் நீரை எவ்வளவு நேசிக்கிறீர்கள், எந்தெந்தக் கோணங்களில் நேசிக்கிறீர்கள் என்பது உள்பட நீருடனான உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (08.12.2017) பகல் 12 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
ஈ-மெயில் முகவரி: bbctamizhosai@gmail.com