Monday, September 06, 2004

37 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வாழ்த்து மடல்


சில வேளைகளில் நடைபெறும் சில சம்பவங்கள் மனிதர்களை இன்ப அதிர்ச்சிக்குள் கொண்டுபோய் விடும்.அப்படிப் பட்ட ஒரு
சம்பவம் அமெரிக்காவில் வதியும் ஒரு தாய்க்கு கிடைத்திருக்கிறது. சம்பவம் இதுதான்.

37 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் விடுமறையைக் கழித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது தாயாருக்கு
அனுப்பிய வாழ்த்து மடல் 37 ஆண்டுகளின் பின்னர் அண்மையில் தாயாரிடம் சென்றடைந்திருக்கிறது.

ஓகஸ்ட் 19,1967 எனும் திகதியிடப்பட்ட இத் தபால் நியூஜேர்சி தபால் நிலையத்தில் தபால் தரம் பிரிக்கும் இயந்திரத்துக்கு பின்னால்
விழுந்துவிட்டது.சென்ற ஜூலை மாதம் மேற்படி இயந்திரத்தினை அகற்றி புது இயந்திரத்தினை பொருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட
தபால் ஊழியர்களால் மேற்படி தபால் கண்டெடுக்கப்பட்டது.

வெறும் 4 சதம் முத்திரை ஒட்டப்பட்டிருந்த தபாலுக்கு மேலும் 23 சத முத்திரை ஒட்டி உரிய முகவரிக்கு அனுப்பி வைத்தனர்
தபால் ஊழியர்கள்.37 ஆண்டுகளுக்கு முன்னர் மகள் அனுப்பிய வாழ்த்து மடல் ஜூலை 14,2004 ல் பெற்றுக் கொண்ட தாயார்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப்போயிருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர் தனது மகிழ்ச்சியில் பெரும் பங்கு
தபால் ஊழியர்களையே சாரும் எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதில் என்ன ஆச்சர்யம் எங்கள் நாடுகளில் தபால்கள் தொலைவதும்,பிந்திக் கிடைப்பதும் சர்வசாதாரணம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

Sunday, September 05, 2004

கனடாவில் பொங்கு தமிழ் நிகழ்வுகள்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அதிகளவில் தமிழர்கள் வாழும் (3,00,000) நாடாக கனடா விளங்குகிறது. இங்கு வாழும் பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த்த பல்வேறு இனக் குழுக்கள்தமது மொழி,பண்பாடு,கலை கலாச்சாரங்களை பேணிவருவதுடன் தமது இன அடையாளங்களைபேணிவருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கனடாவில் வாழும் ஈழத்தமிழர்கள் இங்கு "தமிழ் கனேடியர்" என்றே தம்மை அடையாளப்படுத்தி வருகின்றனர்.அந்த்த வகையில் தமது இருப்பை அடையாளப்படுத்தும் ஒன்றாகவே இப்பொங்கு தமிழ் நிகழ்வை கனடா தமிழ் மாணவர் அமைப்பு கனடாவில் உள்ள சகல பொது அமைப்புக்கள், மற்றும் ஊடகங்களின் ஆதரவுடன் இப் பொங்குதமிழ் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

வலுவான ஒரு சமுதாயமாக,ஒரே தலைமையின் கீழ் தம்மைப் பிரகடனப்படுத்துவதுடன் ,தாயகத்தில்இருக்கும் தொப்பிழ்கொடி உறவுகளுடனான உறவை வலுப்படுத்துவதுடன், இலங்கையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்க வேண்டிய கடப்பாடு கனடா தேசத்துக்கு உண்டு என்பதுடன் தமிழர் தேசியம்,தமிழர் தலைமை,தமிழர் தாயகம்,தமிழரின் சுயநிர்ணயம் போன்ற பொங்கு தமிழின் அடிப்படைகளை வலியுறுத்தும் ஒரு தமிழ் தேசிய நிகழ்வாகவும் இப் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இம் மாதம் 25 ம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்பாக உள்ள "குயின்ஸ் பார்க்"எனும் இடத்தில் இன் நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்புக்கள் இங்கு வெளிவரும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் வானொலிகள் மூலம் வெளியிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.பெருமளவுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.